பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வவுனியாவில் பெற்றோர் போராட்டம்!

வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டியும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் பெற்றோர்கள் இன்று (18)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பற்றாக்குறை தொடர்பாக பல முறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வு பெறப்படாத காரணத்தினால்  மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது விரைவில் இந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.