பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியாவை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிராந்திய அரசியலில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் முதலில் கத்தாருக்கும், பின்னர் சவுதி அரேபியாவிற்கும் விஜயம் மேற்கொண்டார். இதன் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளையும் இணைத்து நேட்டோ போன்ற ஒரு இராணுவக் கூட்டணியை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த ஒப்பந்தத்தின் காரணமாக, இனி பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், சவுதி அரேபியாவும் பதிலடி கொடுக்க நேரிடும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு புதிய இராஜதந்திர மற்றும் இராணுவ சவாலை உருவாக்கியுள்ளதாக கருதப்படுகின்றது.