பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அடியோடு அழிக்க வேண்டும் : சிறீதரன்

46 வருடங்களாகத் தமிழர்களை துன்புறுத்தி வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலாக்கப்பட்டு 46 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டுக் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது வரையில் அமுலில் உள்ளமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நினைவுபடுத்தியுள்ளார்.

குறித்த சட்டமானது, ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட நோக்கம் வேறாக இருந்தாலும் பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு உட்பட இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் வலிகளையும், வேதனைகளையும் சுமந்த தரப்பாக அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசினர் உள்ளனர்.

அவர்கள் தற்போது இந்தச் சட்டத்தை அமுலில் வைத்திருப்பதற்கு முனைவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும் ஜே.வி.பியினர் பயங்கரவாதத்  தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.
தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றுச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர்கள்  முயற்சிக்கின்றார்கள்.

ஜே.வி.பியின் இந்த மாற்றமானது ஏற்றுக்கொள்ள முடியாதது.  ஆகவே, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச தரப்புக்கள் பயங்கரவாதத்  தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் உரிய அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.