இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையின் தலையீட்டுக்கு பின்னர் கைச்சாத்திடப்படும் முதலாவது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமாகும் என்று இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் தொடர்பான உடன்படிக்கையும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு, வலுசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் அது இந்திய – இலங்கை பாதுகாப்பில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்த அழைப்பிற்கிணங்க எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.