‘திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்’: சந்திரிகா

‘ஊழலிற்கு பழகிப்போனவர்களின் மனதை மாற்றுவது கடினம். உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள்’ என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

கொழும்பில் நடைபெற்ற கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கையில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பேசினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர் ஒரு மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார். இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என வேண்டுகோள் விடுப்பார். இது எனக்கு நடந்துள்ளது. நான் பிரதமராகயிருந்தவேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள். அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன்.

எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே அவ்வாறு பெருந்தொகை பணத்துடன் வந்தார்.அந்த நபருடன் சிங்கப்பூரை சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வந்திருந்தார். ஊழலிற்கு பழகிப்போனவர்களின் மனதை மாற்றுவது கடினம். உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள் என தெரிவிக்கும் ஜனாதிபதியொருவரும் இருந்தார்.

அவர் இதனை தனது அமைச்சரவைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், தனது கட்சிக்காரர்களிற்கும் தெரிவித்துள்ளார். அனைவரும் திருடினார்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. இந்த அமைப்புமுறையே நாட்டை சீரழித்தது என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்முன்னாள் ஜனாதிபதியாகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனா ஆகியோரும் கலந்து கொண்மை குறிப்பிடத்தக்கது.