தற்போதைய அரசாங்கமும் பயங்கரவாத தடைச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு!

‘ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக முஸ்லீம் இளைஞன் கைது செய்யப்பட்டமையானது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத தடைச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது’ என்று சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அவர், குறித்த இளைஞனின் கைதுக்கான பல காரணங்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞன் இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களில் கருத்து வெளிப்பாட்டில் ஈடுபட்டான் என தெரிவிக்கின்றனர், இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் என்றால் அது யூத எதிர்ப்பு’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த நாட்டில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன, அந்த இளைஞன் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கவேண்டும்’.
‘வெறுப்பு பேச்சுக்காக மக்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்கின்றீர்கள் என்றால் நாட்டில் அதிகளவான மக்களையும், பாராளுமன்றத்தின் பல உறுப்பினர்களையும் இதற்காக கைதுசெய்ய வேண்டும்’ என்று சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார்.
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம்கள் எவ்வளவு குரோத பேச்சுக்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்பது எங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்’.
‘அவ்வாறான வெறுப்பு பேச்சுக்களில் ஈடுபட்ட எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது கேள்விக்குரிய விடயம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆகவே நாங்கள் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆபத்தினை பார்க்கின்றோம்’.
‘அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு தூரம் இந்த அரசாங்கத்தினாலும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் காண்கின்றோம்’ என்று சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.