தமிழ் மக்களுக்கு தீர்வு கோரி வலுப்பெறும் போராட்டங்கள்!

திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இன்றும் (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி “அனுர – மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி” மற்றும் “ஐ.எம்.எஃப். மரணப் பொறியை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டம் இன்று (02) நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணியினர் ஆதரவு வழங்கும் முகமாக கலந்து கொண்டதுடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுதர வேண்டியும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சரியான நீதியான விசாரணை வேண்டும் எனும் வலியுறுத்தியிருந்தனர்.