பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘சில விடயங்களுக்காக நான் காத்திருந்தேன். நான் ஏற்கனவே ஒரு கட்சியின் இருந்தேன், அங்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று எதிர்ப்பார்த்திருந்தேன். அவர்கள் என்னை தொடர்புகொள்வார்கள் என்று பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ‘தமது எதிர்கால அரசியல் பயணம் குறித்து பல்வேறு தரப்பினர்கள் தன்னுடன் பேசியிருந்தனர். மிகத் தெளிவாக அவர்களின் கொள்கைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள்’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
‘ஆனால் எவ்வித சலனமும் இல்லாமல் தமிழ் தேசியத்தை கையிலெடுத்து அதை மிக காத்திரமாக கொண்டுச் செல்பவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இலங்கை தமிழரசு கட்சியினர் என்னை விலக்கி வைத்தனர். அந்த கட்சியில் ஒரு தனி நபர் முழு ஆதிக்கத்தையும் செலுத்திக்கொண்டிருக்கின்றார்’
‘அந்த ஆதிக்கத்திற்கு சார்பாக சில செயற்பாடுகளும் நடந்துவிட்டன’ என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.