தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரனின் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
“பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார்”.
“அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாது. உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. எப்படி அரசியல் குழுவில் அவர் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது” என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
“அது மர்மமாகவே இருக்கிறது. இது உளவாளிகளின் ஊடுருவல். திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் உள் நுழைக்கப்பட்டுள்ளது” என்று அவர் சாடினார்.
துணிவிருந்தால் மக்களுக்கு முன்னால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வலியுறுத்தியுள்ளார்.



