யாழ்குடா நாட்டிற்குள் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
சந்திவெளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கறுப்பு ஜீலை நிகழ்வானது வருடந்தோறும் கட்டாயமாக நினைவுகூரப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.
எமது இளைஞர்களுக்கு இவ்வாறான கொடூரமான சம்பவங்கள் நடைபெற்றமையினை தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். இதனூடாக இளைஞர்கள் எமது இனத்திற்கு நடைபெற்ற கொடூரமான படுகொலைகளை அறிந்து கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் 2009ம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து படுகொலைகளுக்கும் துரதிஸ்டவசமாக நீதி கேட்பது இலங்கை அரசாங்கத்திடம் தான். எத்தனை முறை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தாலும் இலங்கை அரசு ரோம் சட்டத்தில் கைச்சாத்திடவில்லை என்பதை கூறி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்பதை தொடர்ச்சியாக கூறிக்கொண்டு வருகின்றார்கள்.
தமிழரசுக் கட்சியானது தொடர்ந்தும் சர்வதேச விசாரணையினை கோரினாலும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
முன்னர் இருந்த அரசாங்கங்கள் இந்த படுகொலைகளுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் பின்னின்றன.
நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் நடைபெற்ற படுகொலைகள் அனைத்தும் மாறி மாறி அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டன. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி கட்சி 2024ம் ஆண்டு வரை எந்தக்காலப்பகுதியிலும் ஆட்சி செய்யாமையின் காரணமாக நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை பல தமிழர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர்களும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான முதலாவது சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையினூடாக மாத்திரம் தான் தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் கையாளப்போகின்றோம் என்பதை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியை உடைக்க வேண்டூம் என்றும், பலவீனமாக்க வேண்டும் என்றும் சில தமிழ் கட்சிகள் உழைக்கின்றனர். யாழ்குடா நாட்டுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கட்சிகள் வடக்கு கிழக்கு மக்களின் தேசியப் பிரச்சினை தொடர்பாக எப்படி பேச முடியும். தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதை மாத்திரமே இவர்களின் கொள்கையாக கொண்டிருக்கின்றார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.