செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கும் அங்கு இடம்பெற்ற படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்று கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த இவ் ஆர்ப்பாட்டத்தில் சிவில் அமைப்பு உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இப் போராட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகவும் செம்மணி மற்றும்,பாலச்சந்திரன்,இசைப்பிரியா போன்றவர்களின் படுகொலை தொடர்பிலும் நீதிக்காகக் குரல் கொடுத்து வரும் இளம் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக உள்ளிட்ட பல சிங்கள செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தமையும் விஷேட அம்சமாகும்.
இதே வேளை, செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில், மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.