புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று (08) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டமானது, ‘க்ளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு இறுதியில் செயல்படுத்தப்பட்டது.
பொதுமக்களுக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், பேருந்து நிறுத்தக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, ஒரு புதிய தகவல் மையம் நிறுவப்பட்டு, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சுற்றியுள்ள பகுதியும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
இப்புனரமைப்புப் பணிகள் சுமார் 585 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



