செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை முற்றுமுழுதாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மனிதப்புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் பதினைந்தாம் நாள் நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன.
இதன்போது 11 என்புத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இத்துடன், செம்மணிப் புதைகுழியில் இருந்து 65 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப் பட்டுள்ளன. மனிதப் புதைகுழி முதலில் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளத் தளம் ஒன்று’ என நீதிமன்றால் அடையாளம் காணப்பட்ட குழியிலிருந்து 63 என்புத் தொகுதிகளும், மேலும் செய்மதிப்படங்கள் மூலம் மனிதப் புதைகுழி இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளத்தின் இரண்டாவது பிரதேசமாக’ நீதிமன்றால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து இரண்டு என்புத் தொகுதிகளுமே இவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் முதற்கட்டமாக பரீட்சார்த்தமாக 9 நாள்கள் இடம்பெற்ற அகழ்வுப் பணிகள் ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில், அவை நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரணித்தா. சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோர் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.