கிளிநொச்சி விவசாயிகளால் ஜனாதிபதிக்கு கடிதம்!

கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பலகோடி ரூபாய் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றினை மேற்கொள்ளுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள விவசாயிகளால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ‘இரணைமடுக் குளத்தின் கீழ் வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளாகிய நாங்கள் போரினால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள் நோய்த் தாக்கங்கள் என்பவற்றாலும் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளோம்’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இவ்வாறு இருந்தும் ஒவ்வொரு போகத்திலும் மாவட்ட பயிர்செய்கை கூட்டத் தீர்மானங்களின் படி கட்டுப்பணங்களையும் செலுத்தி வருகின்றோம்’. ‘குறிப்பாக வாய்க்கால் பராமரிப்பு குளத்தின் பராமரிப்பு என்பவற்றையும் முறையாக செலுத்தி வருகின்ற போதும் அந்த நிதிகள் சில கமக்கார அமைப்புக்களால் கமநல சேவை நிலைய அதிகாரிகளின் துணையுடன் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘இது தொடர்பில் எந்தவிதமான கணக்காய்வுகளும் உரிய திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதில்லை’ என்றும் விவசாயிகள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அத்துடன் இரணைமடுக் குளத்தின் கீழ் செயற்பட்டுவரும் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் என்ற அமைப்பானது கமநல அபிவருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்பட்டு வருகின்ற போதும் இதுவரை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் கீழ் பதிவு செய்யப்படாமலும் அதற்கான நிர்வாகக் கட்டமைப்பு 2017ம் ஆண்டிற்கு பின்னர் புனரமைப்பு செய்யப்படாமலும் இயங்கி வருகின்றது’.

‘இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பெரும்போகத்திலும் சிறுபோகத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு நூறு ரூபா வீதம் குறித்த சம்மேளனத்தினால் தொடர்ச்சியாக அறவிடப்பட்ட பலகோடி ரூபா நிதிக்கு என்ன நடந்துள்ளதென வெளிப்படுத்தப்படவும் இல்லை’ என்று கிளிநொச்சி விவசாயிகள் கூறியுள்ளனர்.