கடைகள் அனைத்திலும் தேவையான பொருட்கள் இருக்கின்றது. அதனை வாங்குவதற்கு தான் எம்மிடம் பணம் இல்லை என்று மன்னார் மாவட்ட மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“மன்னார் மாவட்ட கடற் கரையோரங்களில் மீன்பிடியில் ஈடுபடுவது கருவாடு பதனிடுவது மட்டி எடுத்தல் போன்ற பலவாறான வேலைகளை பெண்கள் செய்து வருகின்றோம்.
இதில் கூடுதலாக பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பப் பெண்களும், கிராம மட்ட குழுக்களாக இயங்கி வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.
கொரோனா நோய் தாக்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பயண தடையால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைந்த இந்த நேரத்தில் அண்மையில் கொழும்பில் எரிந்த நிலையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலின் இரசாயன கழிவுகளால் கடலாமைகள் திமிங்கலங்கள் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.
இதனால் மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் சிறு கைத் தொழில் செய்பவர்கள் மட்டி எடுப்பவர்கள் கருவாடு பதனிடும் தொழில் செய்பவர்கள் என அனைத்து மீனவ குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றார்கள்.
கடலுக்கு மீன் பிடிப்பதற்கு செல்ல முடியாது சில வேளைகளில் பிடித்து வரும் மீன்களை விற்பனைக்காக கொண்டு சென்றாலும் அதனைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள்.
அன்றாடம் மீன் பிடித்தால் தான் எங்களுக்கு சாப்பாடு. இதனால் பாடசாலை மாணவர்களின் எதிர்காலமும் பாதிப்படைந்துள்ளது. எனவே அரசாங்கம் கொரோனா பயணத் தடை மற்றும் கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட தென் பகுதி மீனவர்களுக்கு வழங்கும் சலுகையை மன்னார் மாவட்ட மீனவர்களுக்கும் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.