ஐ.நா.வின் அறிக்கையை வரவேற்று சுமந்திரனும் அறிக்கை!

04. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளதை வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று(08) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,”ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் செம்மணி மனித புதைகுழி உள்ளிட்ட தமிழ் மக்களின் கரிசனைகளை சுட்டிக்காட்டியதை வரவேற்கின்றோம். மாகாண சபைத் தேர்தல்கள் நீண்ட காலமாக நடாத்தப்படாமல் இருக்கின்றன என்று கூறப்பட்டதையும் அவதானித்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் “இலஞ்சம், ஊழல் மற்றும் போதைவஸ்துக்களோடு சம்பந்தப்பட்ட பாதாள உலக குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிற அதேவேளையில் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் தமிழ் மக்கள் சம்பந்தமான எந்த விடயத்திலும், குறிப்பாக தமிழ் மக்களது நீண்டகால கால அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான புதிய அரசியலமைப்பு உருவாக்குதல் சம்பந்தமாக, தமது தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நடைமுறைப்படுத்தவில்லை என்பதால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.’ என்றும் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.