எந்த நாட்டிற்கும் விசேட சலுகையையோ முக்கியத்துவத்தையோ இலங்கை வழங்காது: விஜித ஹேரத்

இலங்கை அனைத்து நாடுகளுடனும் சமமான இராஜதந்திர உறவை பேணும் எந்த நாட்டிற்கும் விசேட சலுகையையோ முக்கியத்துவத்தையோ வழங்காது என வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் எப்படி ஈடுபாட்டை பேணுகின்றோமோ அதுபோலவே சீனாவுடன் ஈடுபாட்டை கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் சீன இராணுவத்தின் பயிற்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான நோக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜித ஹேரத், இது நாட்டின் இராஜதந்திர ஈடுபாட்டின் கட்டமைப்பை மீறாத விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இந்த மாதம் வந்துசேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எந்த நாடும் விசேடமானது என கருதவில்லை,பெரிய நாடாகயிருந்தாலும் சரி சிறிய நாடாகயிருந்தாலும் சரி அவற்றுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை பேணுகின்றது,எங்கள் அணுகுமுறையில் பக்கச்சார்பு இருக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வழமையான இராஜதந்திர பரிமாற்றங்களின் ஒரு பகுதியாக பல நாடுகளின் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.