ஈரானின் விமான சேவைக்கு அனுமதியா? இலங்கை மீது மேற்கு நாடுகள் கடும் சீற்றம்

mahan air ஈரானின் விமான சேவைக்கு அனுமதியா? இலங்கை மீது மேற்கு நாடுகள் கடும் சீற்றம்ஈரானின் தனியார் விமான சேவைக்கு இலங்கை அனுமதி வழங்குவது தொடர்பான பிரேரணைக்கு மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியான சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானுக்குச் சொந்தமான தனியார் விமான நிறுவனத்தின் ‘மகான் எயார்’ விமானங்கள் இலங்கை வருவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘மகான் ஏயார்’ விமான நிறுவனம் தற்போது 32 விமானங்களுடன் இயங்கி வருகின்றது. ஈரானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொருள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிறுவனமாக ‘மகான் ஏயார்’ விமான சேவை 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் பட்டியலிடப்பட்டது.

மேலும், ஜேர்மனி, பிரான்ஸ், சிரியா, இத்தாலி, ஸ்பெய்ன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் ‘மகான்’ விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஈரானுடன் நட்பான 10 நாடுகளில் உள்ள 44 இடங்களுக்கு போக்குவரத்து செய்யும் ‘மகான்’ விமான நிறுவனம், அண்மையில் இலங்கை வர அனுமதி கோரியுள்ளது. இதற்கான பிரேரணையே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.