இலங்கையில் ஜனவரி முதல் இன்று வரையில் 375 யானைகள் பலி

இலங்கையில் கடந்த பதினொன்றரை மாதங்களில் 375 யானைகள் பல காரணங்களால் இறந்துள்ளன.   

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74  யானைகளும், மின்சாரம் தாக்கியதில் 53 யானைகளும்,  உணவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் உண்டதில் 49  யானைகளும், விஷம்  வைத்து 7  யானைகளும், ரயில் விபத்துகளில் 10  யானைகளும் உயிரிழந்துள்ளன.   அத்தோடு மூன்று  யானைகள் சாலை விபத்திலும் ஆறு யானைகள் நீரில் மூழ்கியும் இறந்துள்ளன.   

“மற்ற இறப்புக்கான காரணங்கள் இயற்கையான காரணங்களால் அல்லது அடையாளம் காண முடியாத காரணங்களால் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இறந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் யானைகள்” என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், யானை – மனித மோதலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு 149 மனித இறப்புகள் பதிவாகியுள்ளன.   

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் யானைகள் மற்றும் மனிதர்கள் இரண்டிலும் 524 பேர் யானை மனித மோதலால் உயிரிழந்துள்ளனர்.   

வனவிலங்கு திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில், மொத்தம் 488 யானைகள் மற்றும் 184 பேர் மோதலின் விளைவாக இறந்துள்ளனர்.   

வாழ்விட அழிவு, அத்துமீறல் மற்றும் நிலையான சகவாழ்வு நடவடிக்கைகள் இல்லாமை போன்ற காரணங்களால் இலங்கையில் மனித-யானை மோதல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.