இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தாலும் தமிழ் மக்களுக்கு அது இன்னும் கிடைக்கவில்லை – சண்முகம் குகதாசன் எம். பி

இலங்கை தீவுக்கு 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தாலும் தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம்  கிடைக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலை ஆனந்தபுரி விளையாட்டு மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு  இடம் பெற்ற போது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 75 வருடங்களாக இழந்த உரிமைகளை பெறுவதற்காக போராடி வருகிறோம்.  இந்த பகுதியில் சுமார் 3000 மீனவக்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு குடியிருக்கும் மக்களுக்கான காணி உரிமம் இல்லை. இது தொடர்பில் உரிய அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடன் பேசியுள்ளதுடன் பாராளுமன்றத்தில் கூட பேசியுள்ளேன். மக்கள் உரிமைகளை விட பல கிராமங்களுக்கு செல்லும் போது வாழ்வாதாரம் வீதி அபிவிருத்திகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். உரிமைகள் விடுதலைப் போராட்டங்கள் உரிமைகளை மற்றும் அபிவிருத்தி போன்றவைகளையும் சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டும்.

மீனவ சமூகத்தின் பல பிரச்சினைகளில் ஒன்றாக சுருக்கு வலை காணப்படுகிறது. மற்றும் இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு சென்று காணாமல் போயுள்ளனர். சல்லி பகுதியில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்  என்றார்.