திருகோணமலை மாவட்டத்தின் இயலாமை உடைய நபர்களுக்கான தொழில் ஆதரவை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் பங்குதாரர்களுக்கான நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் 2024ம் ஆண்டுக்கான இயலாமை உடைய நபர்களை தொழிலில் இணைத்தல் (ESPD) எனும் திட்டத்துக்கு அமைவாக இடம் பெற்றது.
இதனை சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவள அபிவிருத்தி திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன் பூரண ஒத்துழைப்பை JAICA ஊடாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் இயலாமை உடைய நபர்கள் இத் திட்டம் மூலம் தொழிலில் இணைத்து கொள்ளப்பட்டு இதன் மூலம் சமூகத்தில் அவர்களும் பங்குதாரர்களாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்கள சமூக சேவை உத்தியோகத்தர்கள்,மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன் உட்பட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,JAICA நிறுவன உத்தியோகத்தர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிக்கம்பனிகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.