இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில்பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணிப்பிரச்சினை, மீன்பிடி துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகள், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் விவகாரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவது உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறித்த பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு மத்தியிலேயே போதைப்பொருள் கடத்தலும் இடம்பெறுகின்றது என்று இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், இலங்கை கடல் வளத்தை பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு இந்த கூட்டத்தில் கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.



