இசைப்பிரியா உள்ளிட்டோரின் மரணம் தொடர்பில் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு தீர்வு கோரி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தம்மால் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும், அது தொடர்பான எழுத்துமூல பதிலை எதிர்பார்ப்பதாகவும், முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்திலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தாம் முறைப்பாடு செய்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரையில் எவ்வித முறையான பதிலும் தனக்கு கிடைக்கவில்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். எனவே, தமது கோரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்று, 7 வேலை நாட்களுக்குள் பதிலை எதிர்பார்ப்பதாகவும், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அவர் கூறியுள்ளார்.

தனது முறைப்பாடு தொடர்பில் கோப்பு இலக்கம் மாத்திரமே இதுவரையில் கிடைத்துள்ளதாகவும் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.எனவே, பொலிஸாரின் பதிலை பொறுத்து தாம் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொலிஸாரினால் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் மனித உரிமை நிறுவனங்களும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படும் என தனது கோரிக்கை கடிதத்தில் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்துக்கு அவர் முறைப்பாடு செய்தார்.
இறுதிப்போரின் போது சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்து சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. இதில், பிரதானமாக, இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.