எதிரணிகளால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசுக்கெதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட பல எதிரணிகள் நேற்று கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தன.
தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும், ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழும் உரிமையை பாதுகாக்குமாறு கோரியுமே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என அறிவிக்கப்பட்டது.
எனினும், குறித்த ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. இந்நிலையிலே எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டத்திலும், எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரியவருகின்றது.



