அமெரிக்காவின் நிதியுதவி குறைப்பால் இலட்சக் கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இறப்புகளில் அதிக தாக்கத்தை செலுத்தும் என ஆய்வொன்று கூறுகிறது.

இதன்படி, குறித்த நிதி குறைப்பானது, 2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும் அதிகமான இயற்கைக்கு புறம்பான இறப்புகளுக்கு வழிவகுக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பழமைவாய்ந்த மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) நடத்திய ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, இறப்பு அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள் எனவும், குறிப்பாக ஆண்டுக்கு 7 இலட்சம் வரையான சிறுவர்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் செயற்பட்டுவரும் யு.எஸ்.எய்ட் என்ற அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் திட்டங்களுக்கான நிதியுதவியில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை இரத்து செய்வதாக முன்னதாக ட்ரம்ப்பின் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த செயற்பாட்டின் விளைவாக ‘குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைக் கொண்ட பல நாடுகளில், உலகளாவிய தொற்றுநோய் அல்லது ஒரு பெரிய ஆயுத மோதல் என்பவற்றுக்கு நிகரான தாக்கம் ஏற்படும்’ என்று தி லான்செட் கூறியுள்ளது.

அத்துடன், அமெரிக்க நிதியுதவித் திட்டம் நிறுத்தப்பட்டமையினால், பாதிக்கப்படக் கூடிய மக்களின் சுகாதார ரீதியான முன்னேற்றம், இரண்டு தசாப்தகால பின்னடைவை காணும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவாரம் ஸ்பெயினில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான உதவி மாநாடு ஒன்றுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடவுள்ள நிலையில், தி லான்செட்டின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
133 நாடுகளின் தரவுகளுக்கு அமைய, 2001ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யு.எஸ்.எய்ட்டின் நிதியுதவியினால் 91 மில்லியன் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.