சமஷ்டி, அதிகாரப்பகிர்வு என்று கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. கடந்த 70 வருடங்களாக அதிகாரப்பகிர்வு குறித்து கூறியே மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பெரும்பான்மை மக்கள் விரும்பாததை செய்ய முடியாது. பெரும்பான்மை மக்கள் எதிர்க்கும் விடயத்தை நடைமுறைப்படுத்த முடியாது.
இதனைத் தெரிந்துகொண்டும் அரசியல் தலைவர்கள் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். அபிவிருத்தியின் மூலமே இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும். அதிகாரப்பகிர்வு குறித்து பேசி பயனில்லை. அபிவிருத்தியின் ஊடாகவே இன ஐக்கியத்தை ஏற்படுத்தலாம் என்று சிறிலங்கா அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்து நேற்று கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் மொஹான் சமரநாயக்கவும் கலந்துகொண்டார். இங்கு கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சிறிலங்கா அரச தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோத்தபாய மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;
இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமானால் நாட்டின் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிட்டால் இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. பாதுகாப்பு செயலாளராக நான் முன்னாள் இராணுவ அதிகாரியை நியமித்திருக்கின்றேன். புலனாய்வு பிரிவினரையும் பலப்படுத்தியுள்ளேன். முப்படைத் தளபதிகளுக்கும் உரிய பணிப்புரைகளை விடுத்திருக்கின்றேன். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு செயற்திட்டங்கள் மேற்ெள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதியாக பதியேற்றபின்னர் ஆற்றிய உரையின்போது தமிழ், முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதியாக செயற்படுவேன். தமிழ் , முஸ்லிம் மக்கள் என்னுடன் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என்று நான் அழைக்கின்றேன் என தெரிவித்திருந்தேன்.
எம்முடன் ஒரேயொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரே இருக்கின்றார். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா அவருக்கு தேசிய ரீதியிலான அமைச்சு நான் கொடுத்துள்ளேன். இதுவரை அவருக்கு பிராந்திய ரீதியிலான அமைச்சுக்களே வழங்கப்பட்டுவந்தன. ஆனால் நான் மீனவ அமைச்சை வழங்கி தேசிய ரீதியில் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு நான் தகவலை அனுப்பியுள்ளேன். வடக்கு, கிழக்கில் மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல் இந்திய மீனவர் பிரச்சினையும் காணப்படுகின்றது. எனவே இவற்றுக்கு எல்லாம்தீர்வு காணும் வகையிலேயே தேசிய அமைச்சை டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கியுள்ளேன்.
அபிவிருத்தி மூலமே இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தலாம். சமஷ்டி என்றும் அதிகாரப்பகிர்வு என்றும் கூறிக்கொண்டு மக்களை அரசியல் தலைவர்கள் ஏமாற்றிவந்துள்ளனர். பெரும்பான்மையின மக்கள் விரும்பாத எதனையும் செய்ய முடியாது. அந்த மக்கள் எதிர்க்கும் விடயங்களை மேற்கொள்ள முடியாது. சமஷ்டி என்றும் அதிகாரப்பகிர்வு என்றும் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
அனைவரும் ஒற்றுமையாக வாழும் கெளரவமான சூழல் வேண்டும் என்று கோருகின்றனர். தெற்கில் சிங்களவர் ஒருவர் முருங்கை இலை விற்கின்றார். தமிழர் ஒருவர் வியாபாரம் செய்கின்றார். இதில் கெளரவம் என்று எதனை கொள்ளமுடியும். கெளரவத்துடன் வாழ்வது என்றால் கல்வி, சுகாதாரம், உட்பட மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வாழ்வு தேவை. அதனையே கெளரவமாக வாழும் சூழல் என்று கூறலாம்.
அதிகாரப்பகிர்வு குறித்து பேசி பயனில்லை. அபிவிருத்தி மூலமே இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும். சில தினங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கை சேர்ந்த நான்கு ஆயர்மார்களை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் சந்தித்துப் பேசினேன். அவர்கள் வடக்கு, கிழக்கில் தொழில் பயிற்சிகளை வழங்குமாறும் முதலீடுகளை உருவாக்கி தொழில் பேட்டைகளை உருவாக்குமாறும் வேலைவாய்ப்புக்களை வழங்குமாறும் தொழில் பயிற்சிகளை வழங்கமாறுமே கோரினர்.