யாழில் தடுப்பூசி என மலின அரசியல் – தவிசாளர் நிரோஷ் குற்றச்சாட்டு

சுகாதார அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கையில் அரசாங்கம்; சுகாதாரப் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டே நேற்றைய தினம் அரசாங்கப் பிரமுகர்கள் யாழில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் செயற்பட்ட நடைமுறைகள் கட்டுகின்றன. இவ்வாறான மலின அரசியலை யாரும் செய்யக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நேற்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமரின் புதல்வருமான நாமல் ராஜபக்ச பெரும் அதிகாரிகள் கட்சிப் பிரமுகர்களுடன் வருகைதந்து விளையாட்டு மைதானத்தில் செயற்படுவது போன்று செயற்பட்டுள்ளனர். தொற்றுக் காலத்தில் சுகாதார விழுமியங்களில் சமூக இடைவெளி என்பது பிரதானமானது. சமூக இடைவெளிகள் பேணப்படாது செல்பிகள் கூட எடுக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி நிலையத்தில் பாதுகாப்பாக மக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அர்ப்பணிப்புடன் போரடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசாங்கம் சார் அரசியல்வாதிகள் தடுப்பூசியை நான் கொண்டுவந்தேன். நீ கொண்டுவந்தாய் என மோதிக்கொள்கின்றனர். அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகள் வாய் திறக்க முடியாதிருக்கின்றனர்.

இவ்வாறு மோதுபவர்கள் இலட்சக்கணக்கான மக்களுக்கு மாவட்டத்தில் இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மாகாணத்தில் பி.சி.ஆர் இயந்திரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. அவற்றுக்கு சரியான உயர்மட்டத் தீர்மானத்தினை எடுத்து நடைமுறைப்படுத்த முடியவில்லை. இலட்சக்கணக்கான மக்களுக்கு மாவட்டத்தினுள் தடுப்பூசி செலுத்தவேண்டியுள்ள நிலையில் அதுபற்றி சுகாதார அதிகாரிகளின் வழிநடத்தலில் அரசாங்கத்தின் பிரமுகர்கள் நடவடிக்கை எடுப்பர் ஆயின் வரவேற்கத்தக்கது.

நாளாந்தம் உழைத்து உண்ணும் மக்கள் வயிற்றைக்கட்டிக்கொண்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களாவது தமது நிதியில் உதவ முற்பட்டபோது ஏலவே அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாளாந்தம் உழைத்து வாழும் மக்கள் வயிற்றைக்கட்டிக்கொண்டு சுகாதார நடைமுறைகளுக்காகவே வீட்டில் இருக்கின்றனர். நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டு எத்தனை நாட்கள்? இது வரையில் வசதியற்ற மக்களுக்கு உணவுப்பொருட்கள் சென்றடையவில்லை. ஆனால் ஆளும் அரசியல் தரப்புக்கள் மக்களுக்கு ஊசிபோடப்படுவதை பார்ப்பதற்காக பறந்து வருகின்றனர்.