மூடப்பட்டுள்ள பாடசாலைகளை திறக்கவே முடியாத நிலைமை – கல்வி அமைச்சர் தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை உடனடியாக திறக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் கொரோனாத் தொற்றின் வேகம் இன்னமும் குறையவில்லை. தற்போதைய நிலைமையில் அவசரப்பட்டு பாடசாலைகளைத் திறப்பது மாணவர்களுக்கு சுகாதார ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

எவ்வாறாயினும் விசேட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று பாடசாலைகளைத் திறக்கும் நாட்கள் தொடர்பாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்” என்றார்.