முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் முல்லைத்தீவிலும் சுடரேற்றி, மலர்தூவி அரசியல் பிரமுகர்கள் அகவணக்கம் செலுத்தி அஞ்சலித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளான 18.05.2021 இன்று, வடகிழக்குத் தாயகப் பரப்பிலுள்ள தமிழர்களாலும், புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களாலும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தாயகத்தில் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன. இந் நிலையில் இவ்வாண்டு கோவிட் – 19 அசாதாரண நிலையைக் காரணமாக, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவில்லை.
அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும், மதத் தலைவர்கள், யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் என்பன இம்முறை நினைவேந்தலை வீட்டு முற்றங்களில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தன.
அதற்கமைய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைந்து சுடரேற்றி, பூத்தூவி தனது அஞ்சலிகளை மேற்கொண்டிருந்தார்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா தனது இல்லத்தில் சுடரேற்றி அகவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் க.விஜிந்தன் தனது இல்லத்தில் சுடரேற்றி அகவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் சி.லோகேஸ்வரன் தனது இல்லத்தில் சுடரேற்றி அகவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.