மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 02)- ந.மாலதி

பபூன் சமூக படிநிலைகள் மானிட சமூகத்திலும் உள்ளதா?

பபூன்கள்(Baboon) 50-100 பபூன்கள் கொண்ட குழுக்களாக வாழும். பபூன் சமூகம் கடுமையான படிநிலைகளை கொண்டது. ரோபேர்ட் சப்லோஸ்கி(Robert Sapolsky) என்னும் பேராசிரியர் இளைஞராக இருந்த போது தனது கலாநிதி பட்டத்திற்காக பபூன் சமூகத்தில் ஆய்வுகள் செய்தார். சமூக படிநிலைகளுக்கும் படிநிலைகளில் இருந்த பபூன்களின் மனஅழுத்தத்திற்கும் உள்ள தொடர்பையே பேராசியர் சப்லோஸ்கி ஆய்வு செய்து வந்தார். மனஅழுத்தத்தை இரத்த பரிசோதனை மூலமே அவர் கணித்தார்.

அவருடைய ஆய்வு மனஅழுத்தத்திற்கும் சமூக படிநிலையில் ஒரு அங்கத்தவர் இருக்கும் இடத்திற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காட்டியது. இந்த பபூன் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பபூன்களுக்கே மனஅழுத்தம் அதிகம் என்றும் அவையே அதிகம் நோய்வாய் படுகின்றன என்பதும் இவரின் ஆய்வுகள் கண்ட முடிவுகள். பேராசிரியர் இவ்வாறு ஆய்வு நடத்திக் கொண்டிருந்த போது அந்த பபூன் சமூகத்தில் ஒரு பெரும் துயரம் நடந்தது. அவரின் பபூன் சமூக ஆய்வுகளை முற்றாக அழிக்கும் ஒரு சம்பவம். பின்னர் அதுவே அவருடைய பிற்கால ஆய்விற்கு அவருக்கு ஆழமான புரிதலை உண்டாக்கியது. அவர் மீண்டும் மீண்டும் சொல்லி வரும் அச்சம்பவத்தை பார்ப்போம்.

பபூன் சமூகத்தின் உச்சத்தில் ஆண் பபூன்களே இருக்கும். ஏனைய பலமுள்ள ஆண் பபூன்களுடன் சண்டையிட்டே இவை இந்நிலையை அடையும். இவ்வாறு படிநிலைகளில் உள்ள ஆண் பபூன்கள் படிநிலைகளில் தமக்கு கீழ் நிலையில் உள்ள பபூன்களையும் துன்புறுத்தும். பேராசிரியர் சப்லோஸ்கி ஆய்வு நடத்திய பபூன் சமூகத்தில் சமூக படிநிலையின் உச்சத்தில் இருந்த ஆண் பபூன்கள் தமக்கு ஏமாற்றங்கள் வந்தபோதெல்லாம் ஏனைய பபூன்களை சித்திரவதை செய்யும். குழந்தையுடன் இருந்த தாய் பபூன்களை கூட விட்டு வைக்காது. ஆரம்பத்தில் பபூன் சமூகங்களை ஆய்வு செய்த வேறு ஆய்வாளர்கள் வன்முறையும் தொல்லை கொடுப்பதும் ஆண் பபூன்களுக்கு இயற்கையானவை என்ற முடிவுக்கே வந்தார்கள்.

இந்த பபூன் சமூகம் வாழ்ந்த இடத்திற்கு பக்கத்தில் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான உணவகம் இருந்தது. இந்த உணவகத்தில் எஞ்சிய உணவுகளை அவர்கள் வெளியே ஒரு குப்பை கிடங்கில் எறிவார்கள். எறியப்பட்ட உணவை சாப்பிட வெவ்வேறு பபூன் குழுக்களில் இருந்து பபூன்கள் அக்குப்பை கிடங்கிற்கு வரும். அவை அங்கு எறியப்பட்ட உணவுக்காக சண்டையிட்டே சாப்பிடும். ஒரு முறை அவ்வாறு எறியப்பட்ட உணவு கெட்டுப்போயிருந்தது.Sapolsky Photo Linda A Cicero Stanford News Service VS091030 001 மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 02)- ந.மாலதி

அதை சாப்பிட்ட அத்தனை பபூன்களும் இறந்து விட்டன. பல ஆண்டுகளாக தனது கலாநிதி பட்டத்திற்காக செய்து வந்த ஆய்வு வீணாகி போய்விட்டதே என்ற கவலையுடன், அவருக்கு பல வருடங்களாக பழகிவிட்ட பபூன்களின் இழப்பும் சேர்ந்து பேராசிரியரை துயரத்தில் ஆழ்த்தியது. கவலையுடன் மிஞ்சியிருந்த பபூன் சமூகத்தில் தனது கவனத்தை செலுத்தினார். பேராசியருக்கு ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

அன்று வரை சமூக படிநிலையின் உச்சத்திலிருந்த ஆண் பபூன்கள் ஏனைய பபூன்களை சித்திரவதை செய்வதை அவதானித்து வந்த பேராசியர், இத்தைகைய நடத்தைகள் முற்றாக அழிந்து போனதை இப்போது அவதானித்தார். இது ஏன் என்று தேடிய போது கெட்டுப்போன உணவை சாப்பிட்டு இறந்து போன பபூன்கள் எல்லாம் இந்த பபூன் சமூகத்தின் படிநிலைகளின் உச்சத்திலிருந்த ஆண் பபூன்களே என்பதை கண்டார். குப்பை கிடங்கில் எறியப்பட் உணவை சண்டையிட்டே பெற வேண்டி இருந்ததால் படிநிலையில் உச்சத்திலிருந்த சண்டையில் வல்லமையுள்ள பபூன்களே அங்கு சென்று உணவை சாப்பிட்டு வந்திருக்கின்றன. இவையே பேராசியரின் பபூன் குழுவில் அதிகம் தொல்லை கொடுத்த ஆண் பபூன்கள். மிஞ்சியிருந்த பபூன் சமூகத்தில் ஆண் பபூன்களைவிட பெண் பபூன்களே அதிகமாக இருந்தன.

மிஞ்சியிருந்த ஆண் பபூன்கள் சமூகத்தின் ஏனைய பபூன்களுடன் அன்பாக பழகுவதை பேராசியர் அவதானித்தார். பல வருடங்கள் சென்ற பின்னரும் இச்சமூக பழக்கம் மாறாமல் இருப்பதையும் அவதானித்தார். பபூன் சமூகத்தில் வாலிப வயதை அடைந்த ஆண் பபூன்கள் தமது குழுக்களை விட்டு வேறு பபூன் குழுக்களுடன் சில சமயங்களில் இணையும். இவ்வாறு பேராசிரியரின் பபூன் குழுவில் வந்து இணைந்த ஆண் பபூன்களும் இதே அன்பான நடத்தையை தமதாக்குவதையும் அவதானித்தார். பல வருடங்களின் பின் ஒரு சந்ததி பபூன்கள் இறந்து புதிய சந்ததி பபூன்கள் தோன்றிய பின்னரும் கூட அவருடைய பபூன் சமூகம் இதே கலாச்சாரத்துடன் இருப்பதையும் பேராசியர் கண்டார்.

மாற்றமடைந்த இந்த பபூன் சமூகத்தில் அவரை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, இரு ஆண் பபூன்கள் ஒருவருக்கொருவர் தடவி அன்பை வெளிப்படுத்தும் காட்சியே பேராசிரியரை ஆழமாக பாதித்த இந்த அவதானிப்பை இன்றுவரை அவர் தொடர்ச்சியாக தனது உரைகளில் சொல்லி வருகிறார். அது மட்டுமல்லாமல் இதை மானிட சமூகங்களுடனும் ஒப்பிட்டு ஏனைய மனிதரை அன்போடு நடத்தாத ஆண்களை கொலை சொய்தால் சமூகம் திருந்துமோ என்று நகைச்சுவையுடன் சொல்லுவர்.

“தற்கால ஆண் கொலை” என்ற கருத்தை கூர்திஸ்தான் மக்களின் போராட்ட தலைவரான ஒச்சலானும் அடிக்கடி சொல்லி வருவதும் இங்கு குறிப்பிட தக்கது. அதாவது சிறந்த ஒரு புதிய சமூகத்தில், ஒரு “புதிய ஆண்” உருவாகுவார் என்றும் அதற்காக “தற்கால ஆண் கொலை” இடம் பெறும் என்பதும் அவரின் கருத்து. பேராசியர் பபூன் சமூகத்தில் அவதானித்ததும் ஒச்சலானின் கருத்தும் ஒத்திருப்பதை இங்கு காணலாம். ஒரு சிறந்த சமூகத்தில் ஒரு “புதிய பெண்” மட்டுமல்ல ஒரு “புதிய ஆணும்” உருவாக வேண்டிய தேவையை வேறும் பலர் சொல்லி வருகிறார்கள்.

இன்று அழிக்கப்பட்டு விட்ட அன்றைய விடுதலைப்புலிகள் சமூகத்தில் இவ்வாறான ஒரு மாற்றம் ஆரம்பமாகியிருந்ததை பலர் அவதானித்திருப்பார்கள். அங்கும் “ஒரு புதிய ஆண்” உருவாகியிருந்தார். இதை பல மூத்த விடுதலைப்புலி உறுப்பிர்களிடம் அவதானிக்க கூடியதாக இருந்தது. பபூன் சமூகத்தில் நடந்தது போல ஆதிக்கத்தை கையிலெடுத்து ஏனையவர்களுக்கு கெடுதல் செய்த ஆண்களின் கைகளை ஒடுக்கி விடுதலைப்புலிகள் வேறு ஆண்களுக்கு தலைமைத்துவ பொறுப்பை கொடுத்ததால் இம்மாற்றம் உருவாகி வந்தது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், லெப். கேணல் திலீபன் போன்றவர்கள் இப் “புதிய ஆணின்” சிறந்த உதாரணங்கள். இவர்களைப் போல வேறும் பலர் அப்போது இருந்தார்கள். “இப்புதிய ஆண்களும்”, திலீபனால் உருவாக்கப்பட்ட பெண்கள் வலைப்பின்னலும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பெண்களுக்கு கொடுத்த மதிப்பும் ஊக்கமுமே விடுதலைப்புலிகள் சமூக மாற்றத்தின் அடித்தளமாக திகழ்ந்தன. சமூக நீதி செழிக்கும் சமூகத்தை உருவாக்க பெண்கள் பொது வெளிக்கு வருவேண்டும் என்பதை தனது இளவயதிலேயே உணர்ந்து செயற்பட்டவர் திலீபன். 73099877 427632821495400 4349545124762484736 n மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 02)- ந.மாலதி

இன்று தமிழர்கள் மத்தியில் விடுதலைப்புலி பெண்களின் சமூக சாதனைகளைப் பற்றி பேசுபவர்களே இல்லை. அப்படி பேசினாலும் அவர்கள் விடுதலைப்புலி பெண்களின் படைத்துறை சாதனைகளையே பேசுகிறார்கள். “புதிய பெண்ணை” பற்றி பேசினால் சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியையும் மாதவியையும், மணிமேலையில் வரும் மணிமேகலையையுமே மேற்கோள் காட்டுவார்கள். பாராதி, பாரதிதாசன் போன்றவர்களின் அண்மைக்கால எழுத்துக்களையும் எடுத்துச் சொல்வார்கள்.

ஒவ்வாத பழைய இலக்கியங்களையே சொல்லிச் சொல்லி தமிழர்கள் புதுமைப் பெண்ணை போற்றுபவர்கள் என்று நிரூபிக்க இவர்கள் முனைவதும் இவர்களின் பெண்கள் பற்றிய சிந்தனா வறுமையையே காட்டுகிறது. இவற்றின் மத்தியில் பெரியார் பெண்களைப் பற்றி சொன்னவை தீவிரமான கருத்துக்கள். இன்று பெரியாரை பல தமிழர்கள் போற்றினாலும் அது அவருடைய சமய சாதிய மறுப்புக்காகவே அல்லாமல் அவருடைய பெண்கள் பற்றிய கருத்துக்கள் அதிகம் கவனிக்கப்படாத நிலையிலேயே உள்ளன.

2009க்கு முன்னரான வன்னியில் முளைவிட்ட “பெண் புரட்சிக்கு” அப்பால் தமிழ் பெண்கள் தம் சமூகத்திற்கு சுதந்திர விடுதலையை தரக்கூடிய “பெண் புரட்சியை” கற்பனை செய்யக்கூட முடியமலே உள்ளனர்.

தொடரும்…

மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி