மட்டக்களப்பு செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் நேற்றிரவு பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக கால்நடை உரிமையாளர் ஒருவரின் 09 பசு மாடுகள் உயிரிழந்துள்ளது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்லத்தம்பி பஞ்சாயுதம் என்பவருக்கு 150 மாடுகள் இருந்துள்ளது. அதில் 9 மாடுகள் இறந்துள்ளது.
மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபையினால் சோளப் பயிர் செய்கைக்கு மேச்சல் தரைப்பகுதி வழங்கப்பட்டு இருப்பதன் காரணமாக தற்பொழுது அப்பகுதியிலிருந்து பண்ணையாளர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில், தொப்பிகள், மியான்கல் குளம், தரவை, குடும்பிமலை, ஈரலக்குலம் போன்ற பகுதிகளில் தற்பொழுது கால்நடைகளை கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலைமை காரணமாக தங்களுடைய பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.