மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட அமர்வு இன்று மாநகர முதல்வரினால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவுத்திட்டத்திற்கான விசேட அமர்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபை முதல்வர் வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து அது தொடர்பிலான விளக்கவுரையினை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான விவாதங்கள் நடைபெற்றன. இதன்போது பலர் வரவு செலவு திட்டத்தினை வரவேற்று பேசியுடன் அதற்கு எதிரான கருத்துகளும் முன்வைக்கப்பட்டதுடன் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் உறுப்பினர்களினால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
வரவு செலவு திட்டங்கள் சிறப்பான முறையில் சமர்ப்பிக்கப்படுகின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்ச்சியாக கேள்விக் குட்படுத்தப் படுதாகவுள்ளதாக இங்கு உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், வரவு செலவு திட்டத்தினை வரவேற்று பேசிய அதேவேளை முதல்வரினால் உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்படுவதுடன் தமது உரிமையும் மீறப்படுவதாகவும் உறுப்பினர்கள் கவனத்திற்கொள்ளப் பதில்லையெனவும் தனது வாதங்களை முன்வைத்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தாங்கள் பங்காளிக்கட்சியாகவும் பிரதி முதல்வராகவும் உள்ளபோதிலும் தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை முறையாக பூர்த்தி செய்வதற்கு முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும் மாநகரசபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக அனைத்து உறுப்பினர்களின் உரிமையினையும் அவர்களின் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டே முன்கொண்டுச் செல்லப்படுவதாகவும் மாநகரசபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து சபையில் வரவு செலவு திட்டத்திற்கு சேர்க்கப்படவேண்டிய பல முன்மொழிவுகள் உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்ட காரணத்தினால் அவை சேர்க்கப்பட்டு பிரிதொரு நாளில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு நடாத்தப்படும் என தெரிவித்து மாநகரசபை முதல்வரினால் சபை ஒத்திவைக்கப்பட்டு, முதல்வர் அங்கிருந்து வெளியேறிச்சென்றதை தொடர்ந்து அங்கு அமளி ஏற்பட்டது.
இந்த நிலையில் வரவு செலவு திட்டத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்படாமல் முதல்வர் சென்றதற்கு அங்கிருந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இதன்போது முதல்வருக்கு எதிராக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். காணமுடிந்ததுடன் மாநகர முதல்வரின் ஆசனம் மீது தண்ணீர் போத்தல் தாக்குதல்களும் நடாத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்களினால் ஊடக சந்திப்பு நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பினை மாநகர முதல்வர் தன்னிச்சையாக ஒத்திவைத்ததை கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் பிரதி முதல்வராகவுள்ள க.சத்தியசீலன் தெரிவித்தார்.
கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து அனைவரும் மாநகரசபையினை நடாத்திவரும் நிலையில் முதல்வர் தன்னிச்சையான முடிவுகளை பலகாலமாக எடுத்துவருவதாகவும் குற்றம்சுமத்தினார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் பாதீடு இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் கி.வசந்தகுமார் இதன்போது கருத்து தெரிவித்தார்.
உறுப்பினர்கள் முன்வைத்த முன்மொழிவுகளை வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கவேண்டிய அவசியம் உள்ளதன் காரணமாக பாதீட்டுக்கான வரவு செலவு திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் பிரிதொரு தினத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படும் எனவும் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.