பொது மன்னிப்பின் கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று 15 வருடங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சாவகச்சேரி மிருசுவிலைச் சேர்ந்த சண்முகரட்ணம் சண்முகராஜன் (16 வருடம்),  200 வருடம் சிறைந்தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா நவட்ணம்  (14 வருடம்) ஆககியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணித்திருந்த போது இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் தவிர்த்து இன்னும் சிறைகளில் 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நின்றுவிடாது, இலங்கை அரசாங்கத்தினால் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் – (7கோடி ரூபாய்) லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.