புனித பூமியாக மாறப்போகும் திருக்கேதீஸ்வரம்

திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்காக எந்தவித எதிர்ப்பும் இன்றி சர்வ மத மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளர் சி.மோகன் தெரிவித்துள்ளார்.

பௌத்த இந்து ஒற்றுமை சர்வமத மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த மாநாடு தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய பாரம்பரிய, பொருளாதார, கல்வி, காணி மற்றும் இன பிரச்சினைகளை அரசியலுக்கு அப்பால் இந்து பௌத்த பீடங்களை சேர்ந்தவர்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் எனவும் மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக இலங்கையின் அதி உச்ச பீடமான அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமான ஒரு தெளிவான கொள்கையினை எடுக்கவேண்டும் என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சி.மோகன் தெரிவித்துள்ளார்.