புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி போட்ட பலருக்கு ஒவ்வாமை

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டதையடுத்து, தடுப்பூசியினை பெற்றுக் கொண்ட பலர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இதுவரையில் 20 பேர் வரையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய போது மயங்கி விழுந்த பலர் மற்றும் வீடுகளில் இருந்த பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் இதுவரை 20 பேர் வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்கள்.

இச்சம்பவத்தினைத் தொடர்ந்து நிர்வாகம் ஆடைத் தொழிற்சாலையின் நடவடிக்கைகளை நிறுத்தி, பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 1126 பேரில் இதுவரை 900 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. விருப்பம் இல்லாத சிலருக்கு தடுப்பூசி ஏற்றப்படவில்லை.

ஏற்கனவே கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்களும் இவ்வாறு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.