புதிய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்-இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

சிறந்ததொருமாற்றத்தையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்யுமாறு வலியுறுத்தி வரும் இலங்கையர்களுக்கு உதவ வேண்டுமானால் இந்தியாவும் ஏனைய உறுப்பு நாடுகளும் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியது அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியத்தின் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை  மீதான வாக்கெடுப்பு 06ம் திகதி இன்று நடைபெறவுள்ள நிலையில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு மிகையான அளவில் பாதுகாப்புப்படையினரை பயன்படுத்தியதுடன் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தாரென சுட்டிக்காட்டியுள்ள அவர், மூன்று மாணவ செயற்பாட்டாளர்களைத் தடுத்துவைப்பதற்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமை குறித்து மேலும் மீனாட்சி கங்குலி விசனம் வெளியிட்டிருக்கின்றார்.