தமிழ் பொலிஸ் பிரிவு ஒன்றை உருவாக்க அனுமதிக்கக்கூடாது – சம்பிக்க ரணவக்க

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் அவசியமற்றதே, இதனால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைக்கும் போது பொறுப்புத் தன்மையுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போன்றோரை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய குடியரசு முன்னணி தலைவரான எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் தமிழ் பொலிஸை உருவாக்கக் கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தேர்தல் நெருங்கும் போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக சிலர் அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். 13ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரம் மட்டுமே வழங்கப்படாது உள்ளது. காணி அதிகார விடயத்தில் தேசிய காணி ஆணைக்குழு அமைக்கப்படவில்லை என்றாலும் மாகாண சபையின் அனுமதி இன்றி அரச காணிகளை வடக்கில் மட்டுமன்றி எங்கேயும் கொண்டு செல்ல முடியாது” என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து கருத்துவெளியிட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க, “தெற்கில் இருந்து வடக்கில் குடியேற்றங்கள் இடம்பெறுவதால் தமிழ் இன விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்தே காணி அதிகாரம் தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன. ஆனால் அப்படி தெற்கில் இருந்து வடக்கிற்கு போவதாக தெரியவில்லை. வடக்கில் உள்ளவர்கள் தெற்கில் குடியேறுவதுதான் நடக்கின்றது” என்று தெரிவித்தாா்.

”பொலிஸ் அதிகார விடயத்தில் இந்தியாவில் இருந்து வந்த யோசனையே அது. அந்த திருத்தத்தை கொண்டுவரும் நேரத்தில் இருந்த போராட்ட காலத்தில் தமிழ் இளைஞர்கள், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் போராட்டக்காரர்களுக்கு சிங்கள பொலிஸாரே தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் அந்த சிங்கள பொலிஸார் தெற்கிற்கு வந்து தெற்கில் ஒடுக்குமுறைகளை செய்தனர்” என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தாா்.