தமிழர் தாயகப் பகுதிக்கு செல்கிறாராம் இந்திய தூதுவர்

சிறீலங்காவுக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே நான்கு நாள் பயணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்லவுள்ளதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய தூதுவர் பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதலாவது பயணம் இதுவாகும். அங்கு செல்லும் அவர் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் இந்தியாவின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதுடன், அரசியல் மற்றும் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

பலாலி விமான நிலையம் மற்றும் யாழ் கலாச்சார நிலையம் போன்றவற்றின் அபிவிருத்தியை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தி வருகின்றது. அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இந்தியா தெரிவித்துள்ளது.

அதேசமயம், சிறீலங்கா வான்படையை பலப்படுத்தி, சிறீலங்கா படையினருக்கு இலவசமாக கொரோனோ தடுப்பூசிகளை வழங்கி சிங்கள தேசத்துடனும் அதன் படையினருடன் நட்பை வளர்த்துவரும் இந்தியா, ஐ.நா தீர்மானத்திலும் நடுநிலமை வகிப்பதாக தெரிவித்து சிறீலங்கா அரசுக்கு மறைமுகமாக ஆதரவுகளை வழங்கி வருவதும் இங்கு கவனிக்கத்தக்கது.