ஜெர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் மூலம் தனக்கு சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இனித்தேவையில்லை என்பதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார். அவர் சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கோத்தபாய,மஹிந்தவைப் பின்பற்றி இனவாத வழியில்பயணிக்கத்தொடங்கியுள்ளார் எனத்தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோகராதலிங்கம், இங்குள்ள மனிதக்குரங்குகளை, அரசியல் குரங்குகளை ஏற்றுமதி செய்தால்தான் இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைக் காணமுடியும் என்றார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
சுமார் 22 மில்லியன் மக்களைக்கொண்ட நாட்டிலே ஒரு அரசாங்கம் சீரான ஆட்சியை கொடுக்க முடியாது என்று சொன்னால் அது மிகவும் பரிதாபத்துக்கு, கேவலத்துக்குரிய நாடாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது, அருகிலுள்ள தமிழ் நாட்டை பாருங்கள் சுமார் 76 மில்லியன் மக்கள் வாழ்கின்ற தமிழ் நாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒரு நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ் நாட்டில் ஒரு நல்லாட்சியை வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையில் அது முடியாது?
அண்மையில் எமது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜெர்மன் உஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். அந்த நேர்காணலில் அவரின் தொனி எமக்கு பல விடயங்களை புரிய வைத்துள்ளது. கடந்த காலத்தில் குண்டு வெடிப்புக்கள் மூலம் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கைப்பற்றியதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வளவு காலமும் ரணில் விக்கிரமசிங்கவை சிறுபான்மையின மக்கள் ஒரு வேறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்த்த நிலைமை இருந்தது. ஆனால் ஜெர்மன் ஊடகத்துக்கான பேட்டியில் அவர் ஒட்டு மொத்த சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, கடந்த ஆட்சியை பிடிப்பதற்காக பொதுஜன பெரமுனவினர் எப்படி முயன்றார்களோ அதேபோன்று சிறுபான்மையினத்தை விடுத்து,சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தேவையில்லை ,அவர்களின் தேவையில்லை என்ற நோக்கத்தில்தான் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த பேட்டியை சிங்கள ஊடகங்கள் ,சிங்கள மக்கள் ஆதரிக்கின்றார்கள், வரவேற்கின்றார்கள். கடந்த காலங்களில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் ஜனாதிபாதியாக தற்போதிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவைப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவருக்கு தேர்தல் வெற்றியே ஒரே குறிக்கோளாகவுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச போன்று சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர அவர் வழங்கியுள்ள இந்த பேட்டி மூலம் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தனக்கு தேவையில்லை என்பதனை வெளிப்படுத்த்தியுள்ளார். அதனாலதான் ஐ.நா. வைக்கூட அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். சிங்களமக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேட அவர் முயற்சிக்கின்றார்.
இலங்கையின் குரங்குகளை சீனா மட்டுமன்றி வேறு நாடுகளும் கோருவதாக விவசாய அமைச்சர் கூறியிருந்தார். ஆகையால் முதலில் இங்குள்ள மனிதக்குரங்குகளை, அரசியல் குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் வெளிநாடுகளுக்கு அப்புறப்படுத்த வேண்டும் அப்படி செய்தால்தான் இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைக் காணமுடியும் என்றார்.