கூட்டமைப்பை மக்கள் நிராகரிப்பார்கள் ; ஒற்றை இலக்க ஆசனமே கிடைக்கும் என்கிறார் சிவாஜி

காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பைத் தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு;

“நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே ஆசனங்களைக் கைப்பற்றும். ஏனெனில் தமிழ் மக்கள் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிய ஆணையை வீணடித்து விட்டார்கள்.

இரண்டு பேரினவாதக் கட்சிகள் இணைந்து ஏற்படுத்திய அரசுக்கு ஆதரவளித்த கூட்டமைப்பு தமிழர்களுக்காகச் செய்தவற்றை அவர்களால் முடிந்தால் கூறட்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவளித்து அரசைக் கைப்பற்றிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலையைக் கூட ஏற்படுத்த முடியாது போனது.

இதனை விடுத்து சுயேச்சைக் கட்சிகளைக் குறித்து சுமந்திரனும் சம்பந்தனும் கருத்துக் கூறிவருகின்றனர். ஆனால் இம்முறை அவர்களால் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். ஆகக்கூடியது ஒன்பது ஆசனங்களையே பெற முடியும். வெறுமனே 20 ஆசனங்களைப் பெறமுடியுமெனப் பகல்கனவு காணவேண்டாம். அவர்களால் பெறவும் முடியாது.

அவர்களது அனைத்து ஏமாற்று வேலைகளுக்கும் ஓகஸ்ட் மாதம் பதில் கிடைத்துவிடும். கூட்டமைப்பினது உறுப்பினர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவே அரசுடன் இணைந்து அரசியல் செய்கின்றனர் என மக்களுக்குத் தெரியும். காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பைத் தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்” என்றார்.