ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பேச்சு

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தன்னுடைய கவலையை நேற்று உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கின்றது.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரக உயர் அதிகாரி, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வரும் பிரான்ஸ், இத்தாலி, றோமானியா, ஜேர்மனி, நெதர்லாந்து தூதுவர்களை வெளிவிவகார அமைச்சுக்கு நேற்று அழைத்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கினார்.

முஸ்லிம்கள் அல்லது ஏனைய சிறுபான்மையினத்தவர்களை கைது செய்வதற்கோ தடுத்துவைத்திருப்பதற்கோ பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என மறுத்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தையிட்டு இலங்கையின் கவலையையும் வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, தாரக பாலசூரிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.