ஏழு தமிழர்கள் விடுதலையில் தாமதம் – ஆளுநரை பதவி நீக்கக் கோரி மனு தாக்கல்

ஏழுபேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது எந்தவித முடிவும் எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, பேரறிவாளன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டெம்பர் 9ஆம் திகதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, இதில் உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர், பன்வாரிலால் புரோகித், கடந்த 15 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் அரசியல் சாசன விதிகளை மீறி செயற்பட்டுள்ளதால், அவரைப் பதவி நீக்கம் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிடக் கோரி, சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த, தந்தை பெரியார் திராவிடக் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் நியமனம் தவிர்த்து, பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயற்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356(1) பிரிவு கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில், 15 மாதங்களாக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரின் செயற்பாடு நகைப்பிற்குரியதாக இருப்பதாகவும், இவை அரசியல் சாசன முடக்கத்திற்கு சமமாகும் என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட்டு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.