எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் !

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் ஒன்றாக வாழ் விரும்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர் பதிலுரைத்துள்ளார்.

இது தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிலுரைக்கையில், எம்.ஏ. சுமந்திரன் கூறிய கூற்று உண்மைக்கு புறம்பானது. அது அவருக்கே நன்கு தெரியும்.

1977ம் ஆண்டு நடந்த தேர்தல் என்பது ஆறாம் திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னராக நடந்த ஒரு தேர்தல். அதாவது முழுமையான ஒர் அரசியல் வெளியில் நடந்த தேர்தல் அது. அதற்கு பின்னராக வந்த தேர்தல்கள் எல்லாம் ஆறாம் திருத்தச்சட்டம் உள்ளடக்கப்பட்ட ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளியில் நடந்த தேர்தல்கள். இவற்றினை அடிப்படையாக கொண்டு 1977ம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையினை, அவர்களது அரசியல் பெருவிருப்பினை மாற்றமுடியாது.

எம்.ஏ.சுமந்திரன் அவர்கள தனது கூற்றை உண்மையாக நம்பினால், சிறிலங்காவின் அரசமைப்பில் உள்ள ஆறாவது திருத்தச் சட்டத்தினை நீக்கச் சொல்லிவிட்டு, தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான வழிமுறையாக பொது வாக்கெடுப்புக்கை நோக்கி உழைக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஈடுசெய் நீதியாகவும், தற்போது நடைபெற்ற  வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரே வழி சுதந்திரமும் இறைமையும் தமிழீழத்தான்.

தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ்மக்கள் தமது அரசியல் பெருவிருப்பான தமிழீழத்தை வெளிப்படையாக கூறாமல் இருப்பதற்கான காரணங்களாக,  2009க்கு முன்னர் இருந்த பலம் தற்பேர் இல்லை என்பது மட்டுமல்ல, சிறிலங்காவின் ஆறாவது திருத்தச் சட்டமுமே ஆகும்.

சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டத்தினை நீக்கிவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உழைக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.