உன்னிச்சைக்குளம் பகுதியில் மின்சார வேலியை தகர்த்து உள்நுழையும் யானைகள் ; மக்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக்குளம் நீரேந்துப் பகுதியை அண்டியுள்ள உன்னைச் கிராமத்திற்குள் ஊடுருவிய காட்டு யானைகள் அங்கு வீடுகளுக்கும் மரம் செடி கொடிகளுக்கும் சேதம் ஏற்படுத்திச் சென்று விட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அயலிலுள்ள காடுகளுக்குள் இருந்து கிராமங்களுக்குள் ஊடுருவும் காட்டு யானைகள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக கிரமங்களுக்குள் வந்து சேதம் விளைவித்து வந்ததாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகள் ஊருக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக உன்னிச்சை ஊர்ப் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள காட்டு யானைகள் தடுப்பு மின்சார வேலியையும் தகர்த்தெறிந்துவிட்டு இந்தக் காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் நுளைகின்றன என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரத் தடுப்பு வேலியையும் சேதப்படுத்திக் கொண்டு நேற்றிரவு உன்னிச்சை 8 ஆம் கட்டை கிராமத்திற்குள் ஊடுருவிய காட்டு யானைகள் கூட்டம் அங்கு இராசகுலசிங்கம் பேரின்பராசா என்பவரது வீட்டு மதிலினை உடைத்து சேதம் விளைவித்ததோடு பயன்தரும் பயிர்களையும் மரங்களையும் துவம்சம் செய்துள்ளன.

காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதம் தொடர்பாக கிராம சேவையாளரிடமும் ஆயித்தியமலைப் பொலிஸாரிடமும் கிராம மக்கள் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.