சிறிகாந்தா போன்றவர்களும் எமது கூட்டில் இணைவார்கள்: சிவசக்தி நம்பிக்கை

“சிறிகாந்தா போன்றவர்களும் எமது கூட்டுடன் இணைந்து பயணிப்பார்கள்” என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஓன்றின்போது ஊடகவியலாளர் ஒருவர் சிறிகாந்தா தலைமையிலான குழு புதிய கூட்டணியில் இணையக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“விக்கினேஸ்வரன் ஐயாவின் தலைமையில் கொள்கை சார்ந்த மாற்றுத் தலைமைக்கான கூட்டமைப்பை உருவாக்குவதற்கான பல சந்திப்புக்கள் நடைபெறுகின்றன. அதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்குவது, யாப்பை உருவாக்குதல், கொள்கை சார்ந்து மக்களுக்கான புதிய அரசியல் தலைமை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக நாங்கள் நீண்ட நாள்களாக விக்னேஸ்வரன் ஐயாவுடன் ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பயணத்தில் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் இணைந்து பயணிக்கலாம். குறிப்பாக சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றவர்களும் எமது இந்தக் கூட்டோடு இணைந்து பயணிப்பார்கள்” என்றார்.