பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஆலோசனைச் சபை ஒன்றை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித் திருக்கின்றார். பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ளவர்கள் – அதாவது அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களை விடுதலை செய்வதற்கான பொறிமுறை ஒன்றை கண்டறிந்து, ஜனாதிபதிக்கு இந்தச் சபை பரிந்துரை செய்யும் எனத் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இது சொல்லப் பட்டுள்ள செய்தி. இதில் சொல்லப் படாத செய்தி என்ன என்பதை இனிப் பார்ப்போம்.
ஆபத்தான அம்சங்கள்
இலங்கையில், தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகத் தீவிரமடையத் தொடங்கிய போது, அதனை ஒடுக்குவதற்காக 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டு, இன்று வரை அமுலில் இருக்கின்றது. பொது மக்கள் உட்பட சர்வதேசமும் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்ற போதும், பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நீக்கப் படவில்லை. அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் வகையில் இதிலுள்ள அம்சங்களே இதற்கு எதிரான குரல்கள் பலமாக ஓங்கி ஒலிப்பதற்குக் காரணமாக இருந்தது.
அதே வேளையில், பாதுகாப்புத் தரப்பினர் இதனை துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புக்களும் தாராளமாக உள்ளது. மனித உரிமையை மீறுகின்றவர்களைக் கூட இந்தச் சட்டம் காப்பாற்றும். எனவே சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக இலங்கை அரசாங்கம் திட்டமிட்டதையும் காணமுடிந்தது. இருந்த போதிலும், அதற்குத் தெரிவிக்கப் பட்ட கடுமையான அழுத்தங்கள் காரணமாக அதுவும் கைவிடப் பட்டுள்ளது. பதிலாக சில திருத்தங்களைச் செய்வதன் மூலமாக, சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதுதான் இலங்கை அரசின் உத்தியாகவுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்படுமா?
ஜெனிவா உட்பட சர்வதேச அரங்குகள் பலவற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் வழங்கி யிருந்தது. இது விரும்பிக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியல்ல. நிர்ப்பந்தம் காரணமாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி. ஆனால், அது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைத்த இலங்கை அரசாங்கம், வழமை போல காலத்தைக் கடத்தும் உபாயத்தையே கையாண்டு வருகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அவசர சந்திப்பு ஒன்றை இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடத்தினார். அதன்போது இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருத்தமளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொடிய பயங்கரவாதம் தலைதூக்கிய காரணத்தினால் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில விடயங்களை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும் இது தொடர்பில் ஐக்கிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரையில் அதற்காக ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப் படவில்லை.