Tamil News
Home செய்திகள் பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் – சாணக்கியன்

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் – சாணக்கியன்

பிள்ளையான் எம்.பியை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில் தெரிவித்ததாவது –

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் நடந்திருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் 2005ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் செயற்பட்டு வந்துள்ளனர். இது தொடர்பில் அடிக்கடி கூறியிருந்தாலும் இதன் பாரதூரதன்மை தொடர்பில் புரிந்துகொள்ளாது இருக்கின்றனர். எவ்வாறாயினும் தற்போது 2014ஆம் ஆண்டில் நடந்த சம்பவமொன்று தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் புலனாய்வுப் பிரிவினால் மூன்று இனங்களையும் உள்ளடக்கிய புலனாய்வுக் குழு ரம்பிக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டில் இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாயிஸ், ஆமி மொஹிதின், கலீல் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

கலீல் என்பவர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையானவர். 2009 ஆம் ஆண்டில் திருகோணமலையில் 6 வயது வர்ஷா என்ற சிறுமியின் பெற்றோரிடம் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டு கொலை செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலைக்கு பொறுப்பான மேர்வின் என்பவர் கைது செய்யப்படுகின்றார். ஜனார்த்தனன், நிசõந்தன், ரெஜினோல்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் பொறுப்பில் இருந்த போதே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 8 வயது சிறுவனொருவரும் கப்பம் கோரி 2009இல் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் நால்வரும் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவின் குழுவினர் தமது நோக்கத்திற்காக கப்பம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதன்பின்னர் கைது செய்யப்படுபவர்களை கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு பலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடையே என்ன தொடர்பு என்று நினைக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டு கிழக்கில் ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறாக பரிசோதிக்கப்பட்ட விடயங்களே பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.

பிள்ளையான் உள்ளே இருந்தால் அவர் பலவற்றை கூறலாம் என்பதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளனர். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது அவரின் உடலை எரித்துள்ளனர்.

இதேவேளை குறித்த எம்.பி.யை காப்பாற்ற நினைக்காது, அவரிடம் உள்ள வாக்குகளை பார்க்காது அவரை கைது செய்யுங்கள். இவர் ஒருவரை கைது செய்தால் 2005ஆம் ஆண்டில் இருந்து உண்மைகளை அறியலாம் என்றார்.

Exit mobile version