Home ஆய்வுகள் அரசின் சர்வாதிகாரப் போக்கும் எகிறிச் செல்கின்ற கோவிட் தேசிய இடர்ப்பாடும் – பி.மாணிக்கவாசகம்

அரசின் சர்வாதிகாரப் போக்கும் எகிறிச் செல்கின்ற கோவிட் தேசிய இடர்ப்பாடும் – பி.மாணிக்கவாசகம்

சர்வாதிகாரப் போக்கும்:கோவிட் தேசிய இடர்ப்பாடும்

சர்வாதிகாரப் போக்கும்:கோவிட் தேசிய இடர்ப்பாடும்: பொருளாதாரமா, பொதுமக்களின் உயிர்களா எது முக்கியம்? கோவிட் தொற்று தீவிரமடைந்து உயிர்ப் பலி அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்தக் கேள்வி முக்கியம் பெறுகின்றது. சிக்கலாகின்றது. இந்த சிக்கலுக்குள் இலங்கை அரசு இப்போது சிக்கியிருக்கின்றது.

பொருளாதாரமா, உயிர்களா என்பதைத் தீர்மானிப்பதில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அரசியல் ரீதியிலான முடிவை நோக்கிய போக்கையே கொண்டிருக்கின்றார். பொருளாதாரத்தைவிட மனித உயிர்களே முக்கியம் என்பது சுகதாரத்துறையினர், மருத்துவத்துறையினர் மற்றும் மனிதாபிமானிகளினது நிலைப்பாடாக உள்ளது.

இலங்கையின் கோவிட் தொற்று நிலைமை

மக்களின் உயிர்களைப் பாதுகாத்து கோவிட் தொற்றிப் பரவுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக பொது முடக்கத்தை அறிவித்து, அதனைக் கடுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் இலங்கையின் கோவிட் தொற்று நிலைமை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் இவர்களுடைய கோரிக்கைக்கு ஆதாரமாகவும், உந்து சக்தியாகவும் அமைந்திருக்கின்றது.

கோவிட் பெருந்தொற்று கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே சரியான வழி

ஆனால் அரசாங்கமோ நாட்டின் பொருளாதாரத்துக்கே முக்கியத்துவம் அளித்துச் செயற்படுகின்றது. கோவிட் பெருந்தொற்று கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே சரியான வழி என்றும், அதனை முடிந்த அளவில் நாட்டு மக்கள் அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலேயே முனைப்பு காட்டியிருக்கின்றது.

தடுப்பூசியின் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது என்பது மிக முக்கிய விடயம். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தடுப்பூசிக்கு முன்னதாக மக்களுடைய நடமாட்டங்கள், நாளாந்த செயற்பாடுகள் என்பவற்றில் சுகாதார வழிமுறைகளிலான முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது. இத்தகைய வாழ்க்கை முறைமைக்கு மக்களைப் பழக்கப்படுத்துவதற்குக் கண்டிப்புடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தடுப்பூசி மூலம் கோவிட் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதென்பது தாமதம் மிக்க ஒரு நடவடிக்கையாகும். தடுப்பூசி ஏற்றியவுடன் ஒருவரது உடல் கொரோனா வைரஸை எதிர்த்துத் தடுத்து நிறுத்தமாட்டாது. முதலாவது ஊசி இரண்டாம் ஊசி என இரண்டு கட்டங்களில் அந்த தடுப்பு மருந்தை ஒருவரது உடலில் ஏற்ற வேண்டும். அவ்வாறு இரண்டு கட்ட தடுப்பூசி மருந்து பெற்றவர்கள் சுமார் இரண்டு வாரங்களின் பின்னரே கொரோனா வைரஸை எதிர்க்கக் கூடிய சக்தியைப் பெற்றிருப்பார் என்று கூறப்படுகின்றது.

தடுப்பூசி மருந்தைப் பெற்றுக் கொள்வதில் இலங்கைக்குப் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. முதலில் அதற்குரிய நிதி வளம் அரசிடம் இல்லை. நிதி வளம் இல்லாத நிலையில், கோவிட் பெருந்தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையைப் போன்ற வளர்முக நாடுகளும், இலங்கையைப் போன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளும், வர்த்தகத்துக்காகவும், பிராந்திய அரசியல் நலன்களுக்காகவும் தமது கொரோனா தடுப்பூசி உற்பத்தியைப் பயன்படுத்துகின்ற வசதி மிக்க நாடுகளிடம் இருந்தே தடுப்பூசி மருந்தைப் பெற வேண்டிய நிலையில் உள்ளன.

இவ்வாறு வசதியற்று தவிக்கின்ற நாடுகளை தமது அரசியல் நோக்கங்களுக்காகவும், பிராந்திய வல்லரசு நிலைமைக்காகவும் தடுப்பூசியை உற்பத்தி செய்கின்ற நாடுகள் பயன்படுத்துகின்ற ஓர் பிராந்திய அரசியல் போக்கு நிலவுகின்றது.

பொருளாதாரம் அவசியம் அதனிலும் உயிர்வாழ்தல் முக்கியம்

இந்த நிலையில் கோவிட் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காகத் தடுப்பூசியை மாத்திரமே பிரதானமாகக் கருதுகின்ற இலங்கை அரசினால் தீவிரமடைந்துள்ள கோவிட் தொற்றுப் பரவலைத் தடுத்து நிறுத்திவிட முடியாது.

மக்கள் உயிர் வாழ்வதற்கு பொருளாதாரம் அவசியம். அது இன்றியமையாதது என்பதை மறுப்பதற் கில்லை. ஆனால் உயிர் வாழ்வது அதையும்விட முக்கியம் என்பதை மறுக்க முடியாது. பொருளாதாரம் பாதிக்கப் படுமேயானால், நாட்டு மக்கள் பட்டினி நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என அரச தரப்பினரே எச்சரிக்கை செய்திருக் கின்றனர். இந்த நிலையில் மக்களும் கொரோனாவை எதிர்கொள்வதா அல்லது பட்டினிச் சாவை எதிர்கொள்வதா என்ற சிக்கலான நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

கொரோன வைரஸ் என்ற அரூப உயிர்க்கொல்லி அரக்கன் இலங்கை மக்களைப் பிடித்துப் பேயாட்டம் ஆடத் தொடங்கி இருக்கின்றது. இந்த அரக்கனை எதிர்த்துப் போரிடுவதற்கு இலங்கை அரசு வல்லமையுடன் செயற்படத் தவறி இருக்கின்றது. கோவிட் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டவுடன், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இறுக்கமான நடவடிக்கைளை மேற்கொண்டிருந்த அரசு பலவீனமடைந்திருந்த நாட்டின் அரசியல் நிலைமையை வலுப்படுத்துவதற்காக தன்னல அரசியல் போக்கையே கடைப்பிடித்திருந்தது. குறிப்பாக இனவாத அரசியல் போக்கின் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டிருந்தது.

யுத்தத்தில் வெற்றி பெற்று, அதனை முடிவுக்குக் கொண்டு வந்த வெற்றிப் பெருமிதத்தில் மிதந்த ராஜபக்சக்கள், தமது குடும்பப் பரம்பரைக்கான அரசியல் அதிகாரங்களை நிலைப் படுத்திக் கொள்வதற்கான தந்திரோபாய அரசியல் நடவடிக்கை களையே மேற்கொண் டிருந்தனர். அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்கள் உட்பட ஏனைய நடவடிக்கைகளைத் தற்காலிகமாகக் கைவிட்டு, கொரோனா வைரஸ் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காக முழு மூச்சுடன் செயற்படுகின்ற உத்தியை அரசு கையாளவில்லை. அதனை முதன்மைப்படுத்தவில்லை. மாறாக இராணுவ போக்கிலான செருக்குடன் நாட்டின் பல்வேறு நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டிருக்கின்றது. அந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவே பெருந்தொற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகளையே முன்னெடுத்திருக்கின்றது.

முழு நாட்டையும் பெரிய அளவில் பாதிப்பதற்கு முனைந்திருந்த கோவிட் பெருந்தொற்றின் தீவிரத் தன்மையை உணர்ந்து, அரசியல் பேதமின்றி, அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து சுகாதாரத் துறையினரை முதன்மைப்படுத்தி, பொது நோக்கிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறிவிட்டது. மாறாக அதிகார செருக்குடன்  தன்னிச்சையாக சர்வாதிகாரப் போக்கில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கோவிட் பெருந்தொற்றினைக் கையாண்டு வருகின்றார்.

இது கோவிட் தொற்றின் தீவிரத் தன்மையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக நேர்முரணான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது. அரசாங்கத்தின் விட்டேத்தியான இந்தச் செயற்பாட்டின் பலாபலன்களை இப்போது நாடு மிக மோசமாக அனுபவிக்கத் தொடங்கி இருக்கின்றது, குறிப்பாக கோவிட் பெருந்தொற்று தேசியப் பேரிடராக உருவெடுத்திருக்கின்றது.

இந்த நிலையிலும்கூட, சுகாதரத் துறையினர், மருத்துவத் துறையினர் மற்றும் ஜனநாயகத்தின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை கொண்டு ள்ளவர்கள் உள்ளிட்ட பலரையும் உள்ளடக்கி இந்தத் தேசிய இடரை எதிர்கொள் வதற்கு ஜனாதிபதி கோத்தா பாயவின் தலைமையிலான ஆட்சி யாளர்கள் தயாராக இல்லை. பல்வேறு தரப்பினரும், பல முனைகளில் பிரயோகித்த அழுத்தம் காரணமாக பத்து நாட்கள் நாட்டைத் தனிமைப்படுத்திய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நடவடிக்கை அந்த முடக்க நிலையை செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.

மருத்துவத்துறை பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது

ஆனால் இந்தத் தனிமைப்படுத்தல் நடவடிக்கையானது, அரசு கூறியதைப் போன்று முழு நாட்டையும் முற்றாக முடக்கவில்லை. பொதுமக்களை மாத்திரமே அது முடக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் வழமைபோலச் செயற்படவும், அரச அலுவலகங்கள் முறையாகச் செயற்படவும் வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அறிவுறுத்தி உள்ளார்.

ஆடைத் தொழிற்சாலைகளின் இயக்கம், கட்டிட நிர்மாண நடவடிக்கைகள், அரச அலுவலகங்கள், வர்த்தகச் செயற்பாடுகள் என்பன கோவிட் தொற்றிப் பரவுகின்ற முக்கிய இடங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றைச் செயற்பட அனுமதித்துவிட்டு, பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மாத்திரம் கோவிட் தொற்றைத் தடுத்துவிடலாம் என கருதுவது எந்த அளவுக்கு நியாயமானது என்ற கேள்வி பல தரப்பினராலும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

ஆடைத் தொழிற்துறையைப் பொறுத்தமட்டில், கோவிட் தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் அந்தத் தொழிற் சாலைகளே கோவிட் பரவலுக்கான முக்கிய கொத்தணியாகத் திகழ்ந்தது. வெளிநாட்டில் இருந்து அந்த ஆடைத் தொழிற் சாலைகளுக்கு விஜயம் செய்த குழுவினரின் ஊடாக ஆடைத் தொழிற் சாலைத் தொழிலாளர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினார்கள் என்பதும் அதிகார பூர்வமாகக் கண்டறியப்பட்டிருந்தது.

மங்கள சமரவீர
கௌரி சங்கரி தவராசா

அது மட்டுமல்லாமல், அரச அலுவலக ங்களில் பணியாற் றுகின்ற உயர் மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி தனிமைப் படுத்தப் பட்டுள்ள சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. பிரபல அரசியல் வாதியாகிய மங்கள சமரவீர, புகழ்வாய்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியாகிய கௌரி சங்கரி தவராசா ஆகிய நாட்டின் முக்கிய புள்ளிகள் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்கள். இவர்களது இழப்பு பேரிழப்பாகும்.

நாடு தனிமைப்படுத்தல்

நாடு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்கள் தாதியர் உட்பட 350 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அங்கு நாளாந்தம் 10 தொடக்கம் 15 பேர் கொரோனாவினால் மரணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொழும்பு தேசிய மருத்துவமனை உள்ளிட்ட நாட்டின் முக்கிய மருத்துவமனைகள் கோவிட் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவத் துறையினர் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலைப்பளுவுக்கும் மன உளைச்சல்களுக்கும் சிரமங்களுக்கும் உள்ளாகி பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கோவிட் தொற்றினால் ஏற்படுகின்ற மரணங்கள் 200 ஐத் தாண்டியுள்ளது. நாளாந்த தொற்று 4600 ஐக் கடந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எதிர்வு கூறியதற்கொப்ப நாட்டின் தொற்று 40 வீதமாக மாறியுள்ளது. மரணமடைவர்களின் நாளாந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அடுத்தடுத்த மாதங்களில் கோவிட் பெருந்தொற்று பேரிடராக மாற்றமடையும் என்றும் அந்த எதிர்வு கூறலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்து உல்லாசப் பயணிகளின் வருகையை அரசு ஊக்குவித்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் உல்லாசப் பயணத்துறையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இலக்கு நிர்ணயித்து அதனை எட்ட வேண்டும் என்றும் அதற்காக உல்லாசப் பயணத்துறையினர் செயற்பட வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி இருக்கின்றது.

மொத்தத்தில் நாட்டின் கோவிட் கொள்ளை நோயின் தாக்கத்தை – அதன் உண்மையான தாற்பரியத்தைச் சரியான முறையில் உணர்ந்து விஞ்ஞானபூர்வமான நடவடிக்கைகளின் மூலம் இந்தத் தேசிய பேரிடரை எதிர்கொள்வதற்கு அரசு தவறியிருக்கின்றது. இது முழு நாட்டிற்கும் பெரும் கேடு விளைவிப்பதற்கே வழிவகுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version