விஜயபாலன் மதியழகன் விபத்தில் உயிரிழப்பு
‘விஜய்’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ஒட்டாவா காவல்துறையைச் சார்ந்த இளம் தமிழ் காவல்துறை அதிகாரியான விஜயபாலன் மதியழகன் செவ்வாய்க்கிழமை இரவு ஒட்டாவாவில் இடம்பெற்ற மோட்டார் சயிக்கிள் விபத்தில் சாவைத் தழுவியிருக்கிறார்.
28 வயது நிரம்பிய விஜய் காவல்துறையில் இணைய முதல் கனேடிய இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார். 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒட்டாவா காவல்துறையுடன் விஜய் தன்னை இணைத்திருக்கிறார்.
ஓட்டாவா நகருக்கு அண்மையில் பெருந்தெருவான 417 இலிருந்து 174 பிரிகின்ற இடத்தில் குறிப்பிட்ட மோட்டார் சயிக்கிள் விபத்து செவ்வாய் இரவு 8.45 மணிக்கு இடம்பெற்றதாகவும் விபத்தில் வேறு எந்த வாகனங்களும் தொடர்புபட்டிருக்கவில்லை எனவும் சிரிவி செய்திகள் தெரிவிக்கின்றன.
“விஜய் காவல்துறையில் மிகச்சொற்ப காலமே பணியாற்றிய போதிலும் அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவராக அவர் திகழ்ந்திருக்கிறார். விஜய் எப்போதுமே புன்சிரிப்புடன் காணப்படுவார்” என்று அவரது நண்பர் அலி முஹசன் தெரிவிக்கிறார்.
பெண்களுக்கான ஒரு தொண்டு நிறுவனத்துடன் தன்னை இணைத்திருந்த விஜய் புதிதாக கனடா நாட்டுக்கு வருகின்றவர்களுகளின் வீட்டுப் பாவனைக்குத் தேவையான பொருட்களை தன்னார்வ அடிப்படையில் வழங்கி வந்திருக்கிறார்.
“எமது காவல்துறைக் குடும்பம் கடந்த இரவு ஒரு சகோதரனை இழந்திருக்கிறது. அவர் எங்களுடன் மிகவும் குறுகிய காலமே இருந்திருக்கிறார். அவரது தாராள மனப்பாங்கும் இனிமையான இயல்பும் நாம் மறக்கமுடியாத நினைவுகளை எமக்குத் தந்திருக்கிறது. பொதுமக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒருவராக விஜய் இருந்திருக்கிறார். கனேடிய இராணுவத்தில் இணைந்து கனேடிய நாட்டுக்காகப் பணிபுரிந்த விஜய் எமது காவல்துறையில் இணைந்து சமூகத்துக்காகப் பணிபுரிந்திருக்கிறார்” என்று ஒட்டாவா காவல்துறை அமைப்பின் இடைக்கால அதிபர் தனது இரங்கற் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
விஜயின் சடுதியான சாவின் காரணமாக ஒட்டாவா காவல்துறை நிலையங்கள் அனைத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.