விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு
மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை வெற்றிபெற்றுள்ளது.
மார்பக, கருப்பை, கணைகம், மூளை போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் தொடர்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரத மூலக்கூறுகள் மேற்கூறப்பட்ட புற்றுநோய் கலங்களை அழித்தபோதும், அவை ஆரோக்கியமான ஏனைய கலங்களை அழிக்கவில்லை. இது மருத்துவ உலகத்திற்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளை அடிப்படையாக கொண்ட செய்முறையின் மூலம் பல வகையான புற்றுநோய் கலங்களில் எங்கள் ஆய்வுகளை பல தடவைகள் மீண்டும் மீண்டும் மேற்கொண்டு, தரவுகளை உறுதிப்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் ரெக்சஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரும், இந்த ஆய்வின் பிரதம விஞ்ஞானியுமான பேராசிரியர் ரட்னா வட்லமுடி.
Xenografts எனப்படும் மனிதர்களில் உருவாகும் புற்றுநோய், எலிகளில் உருவாக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது புரதம் மிகவும் சிறப்பாக செயற்பட்டதுடன், அது சிகிச்சைக்கான வழியையும் காண்பித்துள்ளது.
எமது நோக்கம் சிறிய மூலக்கூறுகளை உருவாக்கி அதன் மூலம் புற்றுநோய்களை தடுப்பதாகும். அவை தற்போதைய முறைகளை எதிர்ப்பவையாகும். 2017 ஆம் ஆண்டு ERX-11 எனப்படும் மூலக்கூறு உருவாக்கப்பட்டது. அது Estrogen Receptor (ER) எனப்படும் புரத மூலக்கூற்றை அழிப்பதற்கு உருவாக்கப்பட்டது. இந்த புரத மூலக்கூறே மார்பக புற்றுநோய்க்கான காரணம்.
மனிதர்களில் உள்ள ஈஸ்ரோஜன், புரெஜெஸ்தெரோன் போன்ற ஹார்மோன்களின் வாங்கிகளாக (Receptors) தொழிற்படும் புரதங்களிலும் அவை தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த வாங்கிகள் மிகவும் ஆபத்தானவை.
அதன் பின்னர், ERX-41 எனப்படும் மூலக்கூற்றை பயன்படுத்தி மனிதர்களில் உருவாகும் பெருமளவான புற்றுநோய்கள் எலிகளில் செயற்கையாக உருவாக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மூலக்கூறு புற்றுநோய் கலங்களை அழிப்பது பல தடவைகள் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வு மார்பக புற்றுநோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்ட போது அது கலங்களில் நச்சுத்தன்மையான தாக்கத்தை அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை. புற்றுநோய்க் கலங்களுக்கு அருகில் உள்ள ஆரோக்கியமான கலங்களையும் அழிக்கவில்லை.
சிகிச்சையின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாகவே உள்ளது. இதனை நாம் கணையம், மூளை மற்றும் கருப்பை புற்றுநோய் கலங்களிலும் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் வட்லமுடி.
மேற்கூறப்பட்ட புற்றுநோய்கள் மிகவும் ஆபத்தானவை, அவற்றை குணப்படுத்த மிகவும் சில சிகிச்சை முறைகளே உள்ளன. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பு பல வழிகளை திறந்துள்ளது. அதனால் பக்கவிளைவுகளும் இல்லை. எனவே எமது இந்த புதிய ஆய்வு பெருமளவான மக்களை புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை எமக்கு பிறந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டலஸ் என்ற பகுதியை தளமாகக் கொண்ட EtiraRx என்ற நிறுவனம் எதிர்வரும் வருடம் இந்த புதிய மருந்தை மனிதர்களில் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னர் மக்களின் பாவனைக்கு அது வழங்கப்படும் என இந்த ஆய்வை வெளியிட்ட The journal Nature Cancer என்ற விஞ்ஞான ஏடு தெரிவித்துள்ளது.
நோய்கிருமிகள் எமது உடலின் பகுதியல்ல என கண்டறியும் எமது நோயெதிர்ப்பு சக்தி அவற்றை அழிக்கின்றது. அதேபோலவே புற்றுநோய் கலங்களையும் எமது உடலின் பகுதியல்ல என எண்ணி அழிக்கின்றது. எனவே எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் அது உடலில் உருவாகும் புற்றுநோய்க் கலங்களை அழிக்கும்.
உடற்பயிற்சி எமது உடலில் உள்ள அட்ரனலீன் எனப்படும் ஹார்மோனை அதிகரிக்கின்றது. அது எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. சிடி8ரி எனப்படும் கலங்களின் வாழ்தகவை உடற்பயிற்சி அதிகரிப்பதாக என்.வை.யூ குறோஸ்மன் என்ற மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பரிசோதனைகளும் எலிகளிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. Pancreatic Cancer புற்றுநோய் உள்ளவர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அது அவர்களில் சி.டி8 ரி கலங்களின் அளவை 50 விகிதமாக அதிகரிப்பதுடன், சிகிச்சை பெற்றவர்களின் வாழ்நாளையும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் அதிக பலனை தருவதாக என்.வை.யூ லன்கோன் சுகாதார பிரிவின் பிரதித் தலைவர் டப்னா பார் சகி தெரிவித்துள்ளார்.